மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 23 மாநாடு வேடசந்தூர் பகுதியில் நடைபெறுவதையொட்டியும், தோழர் ஜீ.வீரய்யன் நினைவு தினத்தை முன்னிட்டும் மரநடுவிழா நடைபெற்றது.
வருகிற டிசம்பர் 28, 29 தேதிகளில் வேடசந்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மக்களிடம் எடுத்துச்செல்லும் விதமாக மாவட்டக்குழு, மற்றும் வேடசந்தூர் ஒன்றியக்குழு சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அதன் முதல் நிகழ்ச்சியாக விவசாயிகள் சங்கத்தின் முன்னோடி தலைவரான தோழர் ஜீ.வீரய்யன் நினைவு தினத்தில் மரநடுவிழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் புதுரோடு அருகேயுள்ள கல்குளத்தில் 23வது மாநாட்டை குறிக்கும் வகையில் 23 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.முத்துச்சாமி, ஜி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் முனியப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சவடமுத்து, உள்ளிட்டோர் பூவரசு, வேம்பு, புளியங்கன்றுகளை நடவு செய்தனர். மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விளக்கி பேசினார்.