திண்டுக்கல் சுரபி கல்லூரியில் நடைபெற்ற பாலியல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.
திண்டுக்கல்லில் வியாழனன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் திண்டுக்கல்லில் தனியார் நர்சிங் கல்லூரியில் உள்ள தாளாளர் தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் இதனையடுத்து மாணவிகள் தொடர்;ச்சியாக 2 நாட்கள் போராடினார்கள். குற்றவாளி நீதிமன்றம் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பிரச்சனையில் குற்றவாளி ஜோதிமுருகனுக்கு 11 வது நாளிலேயே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்த்துறை போக்சோ வழக்கு பதிந்திருந்தாலும், குற்றவாளி எளிதில் வெளிவரும் வகையில் சாதகமாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதன்காரணமாகவும் குற்றவாளி ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளது. எனவே தாளாளர் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளி ஜோதிமுருகன் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்குகளை பதிவதற்கு பதிலாக போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தை அச்சுறுத்தும் வகையில் மாதர் சங்க தலைவர்கள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத அளவிற்கு காவல்த்துறை வழக்கு பதிந்துள்ளது.
இதிலிருந்தே குற்றவாளிக்கு சாதகமாக காவல்த்துறை மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு உள்ளிட்டோர் இயங்குகிறார்கள் என்பது பொதுமக்கள் மத்தியில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகளுடன் தமிழக முதல்வர் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார்.
அது ஒரு நல்ல முன்மாதிரியான நடவடிக்கையாகும். அதே போல் நீதிமன்றம் போக்சோ குற்றவாளியான ஜோதிமுருகனை பிணையில் விட்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் தமிழக அரசு இந்த பிணையை ரத்து செய்ய சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற டிச.11ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மணிக்கூண்டில் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசின் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நேரடியாக வந்து இந்த வழக்கில் தவறு செய்திருக்கக்கூடிய காவல்த்துறை மற்றும் அதிகாரிகள் மீது புகாரை பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுரபி கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் உறுதியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் முன்வரவேண்டும். மேலும் இந்த வழக்கை தமிழக அரசின் சிபிசிஐடி விசாரணை செய்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் காவல்த்துறையினர் பாலியல் புகார் கொடுத்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் உரிய ஆவணங்களைää சாட்சியங்களை கைப்பற்றியிருக்க மாட்டார்கள். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
ஆகவே மாவட்டக்காவல்த்துறை குற்றத்திற்கு ஆதரவாக செயல்படும் பாஜக வழக்கறிஞர் தெய்வேந்திரன் மற்றும் அவர்கள் கூட்டத்திற்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு ஒரு மன தைரியத்தை ஏற்படுத்தும் நியாயம் வழங்க உதவி செய்யும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கே.பாலபாரதி கேட்டுக்கொண்டார். பேட்டியின் போது சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம் ஆகியோர் உடனிருந்தனர்.